பக்கங்கள்

செவ்வாய், 2 அக்டோபர், 2018

ஆனந்தி அக்கா மல்லிகை தொடுத்தால்..
முல்லையின் முகம் வாடிப்போகும்..
சரமாகும் வாய்ப்பு விரல்விட்டுப் போனதென
நந்தியாவட்டைகள் நெஞ்சம் வெடிக்கும்..

கமலா அம்மா கத்தரி நறுக்க...
வடிவியல் வாய்ப்பாடுகள் வாயடைத்துப்போகும்..
ஒட்டிப்பிறந்த குட்டிகுழந்தையர் போல..
ஒவ்வொரு துண்டும்.. ஒன்றே போலாய்..

புள்ளிக்கோலம் புனிதா வரைந்தால்..
ஒவ்வொரு புள்ளியும் நின்று பேசும்..

நித்யா மடிப்பாள்...துவைத்த துணியை..
மடிப்பில் மனமது மடங்கிப் போகும்..

பங்கஜவல்லி பாத்திரம் கழுவினால்..
நட்சத்திரங்கள் நிச்சயம் நாணும் .

ஒவ்வொருபெண்ணும் உண்மையில் கவிதை..
நிஜத்தில் பெண் அவள் நித்திய கவிதை..
விழிபடைத்தோர் மட்டும் வாசிக்க கடவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக