பக்கங்கள்

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

காலக் குயவன் கைகளில்....

கொஞ்சம் கிடைத்தது காலக் குயவன் கைகளில்

பானை செய்ய உத்தேசித்தான் முதலில்,

மண்ணை மிதித்து,

மனதுபோல வந்தவுடன்சக்கரத்தில் இட்டு சுற்ற ஆரம்பித்தான்

வாழ்க்கைச் சக்கரம் சுற்ற ஆரம்பித்தது..

குயவனின் கைகள் வனைய ஆரம்பித்தது...

சக்கரம் சுற்றச் சுற்ற..மண்ணுக்குக் கிலி எடுத்தது...

மண்ணின் மனது தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது,

உயிர் போகும் வேதனை உணர ஆரம்பித்தது,

குயவனும் விடாது வனைந்து கொண்டிருந்தான்...

பயத்தில் கூக்குரலிட்ட களிமண்சடுதியில் சமாதானமாகி,

சுற்றோட்டத்தில் சுகம் காண ஆரம்பித்தது...

பானையின் உருவத்தில்

தன்னைப் பொருத்தி பார்க்கும் ஆவலில்

படும் வேதனைகளை பொருட்படுத்தவில்லை அது....

விளிம்பு வரை வந்தாகிவிட்டது...

முழு வடிவமும் அடுத்த சுற்றில்...

நிம்மதிப் பெருமூச்சு விட்டதுபாதிப் பானையாகிய களிமண்...

காலக் குயவனுக்கு என்ன தோன்றியதோ...

வனைந்த பானை வடிவில்லை என்று நினைத்தான் போலும்

உருவாக்கிய பானையை ஒட்டுமொத்தமாய் சிதைத்து

மீண்டும் மண்ணாக்கி....

பூச்சாடி செய்யப் புறப்பட்டான் இப்போது...

களிமண் குழம்பியது...எதற்குள் தன்னை இருத்திக்கொள்ள?

பானைக்குள்ளா...ஜாடிக்குள்ளா...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக