தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஐந்து ரூபாய்க்கு ரெண்டு (கதை)

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் வருடத்திற்கு ஒரு முறை, வாராது வந்த மாமணியாய் ...அந்த வருடம் கூடுதலாகவே இரண்டு மாதம் கிடைத்து. என் 4வயது மகனுடன் கோவை சென்று இறங்கினேன். அம்மா வீட்டில் தங்கை குடும்பம் மற்றும் அம்மாவுடன் ஜாகை.

முதல் வாரம் பிரயாணக் களைப்பும்..பார்க்க வரும் உறவினர்களுக்கான விருந்தோம்பலுமாகக் கழிந்தது.இரண்டாவது வாரம் சற்றே ஆசுவாசமாக இருந்தது. வழக்கம் போல, நானும் என் தங்கையும், திண்ணையில் உட்கார்ந்து வம்பளக்க ஆரம்பித்தோம். வீட்டின் முன் பக்கம் கதவின் இரு பக்கமும் உள்ள குதிரைத் திண்டில்...நாங்கள் அமர்ந்து விட்டோமென்றால், தெருவே களை கட்டப் போகிறது என்று அர்த்தம்.

அந்தத் தெரு ஒரு கட் ரோடு. வசிக்கும் குடும்பங்கள் எல்லாருமே நல்ல பழக்கம். எனவே போக வருவோரை இழுத்து வைத்துப் ஊர்க்கதை பேசுவது. பூ, காய்கறிக் காரர்களிடம் பேரம் பேசி வாங்குவது என்று நேரம் போவதே தெரியாது.

காலை 10 மணி வாக்கில், ஒரு சைக்கிள்காரன் தெருவில் நுழைந்தான்.பெரிய தட்டிக் கூடை சைக்கிள் கேரியரில் கட்டப்பட்டிருந்தது. அவன் பின்னால் ஜோவென்று சிறுவர் கூட்டம். அருகில் அவன் வந்தவுடன் கூடைக்குள் என்னவென்று ஆச்சர்யம் தாளாமல் எட்டிப் பார்த்தோம்.குட்டிக் குட்டியாய், பஞ்சடைத்த கலர் பந்துகள் போலக் கோழிக்குஞ்சுகள். கலர்க் கலராய்.., பொறித்து ஓரிரு நாட்கள் தான் ஆயிருக்கும் போல. மிளகுக் கண்ணும், கீச் கீச்சென்று சத்தமுமாக நெருக்கி அடித்துக் கொண்டிருந்தன. அத்தனை அழகு.

என் மகன் ஆரம்பித்தான். "அம்மா கோழிக்குஞ்செல்லாம் ஏன் கூடைக்குள்ள இருக்கு?""உன்னை மாதிரியே குறும்பு செஞ்சிருக்கும். புடிச்சி அடச்சி வெச்சிருப்பாங்க" என் தங்கை சொன்னாள்."போ சித்தி...நீ பொய் சொல்ற..எல்லாரும் விளையாட வாங்கறாங்க பாரு...எனக்கும் வாங்கிக் குடு"

இதற்குள் எதிர் வீட்டு பிரவீன் பச்சை ஒண்றும் சிவப்பு ஒன்றுமாக ரெண்டு கோழிகளை வாங்கி விட்டான். ஐந்து ரூபாய்க்கு ரெண்டு.

என் தங்கையின் இரண்டு வயது மகளும் அனத்த ஆரம்பித்தாள். "பெரிம்மா எனக்கும் கோழி வாந்திக் குது"நான் சொன்னேன் ...

�முதல்ல உங்கம்மாவை உன்ன நல்லா மேய்க்கச் சொல்லு...அப்புறம் கோழிய மேய்க்கலாம்.

"என்னை ஏண்டி இழுக்கற?" என்றாள் என் தங்கை.

இதற்குள் அண்ணன், தங்கை இருவரும் பாட்டியைப் பிடித்து, பணத்துடன் வெளியே இழுத்து வந்து விட்டார்கள்.

அம்மாவும், "பசங்க கேட்டா வாங்கிக் குடுக்க வேண்டியது தானே" என்று சொல்லிக் கொண்டே ஆளுக்கு இரண்டாய் கோழிக் குஞ்சுகளையும் வாங்கிக் குடுத்தும் விட்டார்கள். சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்ச் என்று கலர் கலராய் திசையொன்றுக்கு ஓடின கோழிகள்.குழந்தைகள் முகம் சந்தோசத்தில் பொங்கியது.

"எதுக்கு பெரிம்மா கோழி வாங்கிருக்கோம்?"என்றாள் தங்கை மகள்."ஆமா...நீ முட்டையா சாப்பிடறயல்ல அது தான் பெரிம்மா கோழி வாங்கி விட்டிருக்கா.. சுகுணா பிராய்லர்ஸ் மாதிரி பெரிய பண்ணையே ஆரம்பிக்கப் போறா பாரு, இந்த நாளு கோழிய வெச்சு..நீயும் கணக்கில்லாம முட்டை சாப்பிடலாம்." என்றாள் என் தங்கை.

"ஏகத்தாளம் பேசாதடி..கோழிய நல்லாப் பாத்துக்கோ...எங்காவது ஓடப் போகுது...அப்புறம் நாம பெத்த முத்துக ரெண்டும் கத்தித் தொலைக்கும்." என்றேன்.
"அம்மா கோழி கீச்சுக் கீச்சுன்னு கத்திட்டே இருக்கே...பசிக்குதாம்மா கோழிக்கு" கரிசனத்துடன் என் மகன்.
அடடே கோழிக்கு என்ன குடுக்க சாப்பிட?
முன்னப் பின்ன கோழி வளத்தாத் தான தெரியும். அம்மா வேற, கோழி வாங்கிக் குடுத்த கையோட...ஸ்கூலுக்கு கிளம்பிப் போயிட்டாங்க, நான் வந்ததை காரணம் சொல்லி ஒரு மாதம் லீவ் போடுவதாக உத்தேசம். போயிட்டு சாயந்திரம் தான் வருவேன்னு வேற சொல்லிட்டுப் போனாங்க.
அதுவரை கோழிய பட்டினி போடுவதா?"ஏண்டி, அரிசி போடலாமா கோழிக்கு...?" என்றேன் நான்.
"அரிசி சாப்பிட்டா காமாலை வராது, போன வாரம் பக்கத்துத் தெருவில ஒரு ஆடு அரிசி சாப்பிட்டு செத்துப் போயிடுச்சாம்." என்றாள் எனதருமை தங்கை.

இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சு வெச்சுக்கோ...ஆட்டுக்குத் தானடி காமாலை வந்திச்சு...கோழிக்கும் வருமா? " விசனத்துடன் நான்.

"ஏண்டி நேத்துப் பண்ண கோழி பிரியாணி ஃப்ரிஜ்ஜில இருக்கே அதை எடுத்துப் போடுவமா?" என் புத்திசாலித் தங்கை.

"உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? கோழி பிரியாணிய கோழிக்கே போடுறது பாவமில்ல, எப்பிடிடி உனக்கு மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கத் தோணுது... இரு..இரு... கோழிக்கு மோரில வெங்காயத்தை வெட்டிப் போட்டுக் குடுத்தா நல்லதுன்னு படிச்ச ஞாபகம்" இது நான்."நீ மனுசங்களுக்கான சாப்பாடு பத்தித்தான படிச்ச...கோழிக்கெல்லாம் எப்பப் படிச்ச?" எகத்தாளத்துடன் அவள்.

"எருமமாடே.. எல்லாத்துக்கும் நக்கல் பண்ணிட்டிருந்தேன்னா கோழிமாச்சு..நீயுமாச்சுன்னு போயிட்டே இருப்பேன்... நீ பிரியாணியே போட்டுக்கோ..." கோபத்துடன் நான்.

"சரி...இரு வெங்காயத்தை நறுக்கிட்டு வர்றேன்...சின்ன வெங்காயமா...பெரிய வெங்காயமா...வீட்டில சின்ன வெங்காயம் தான் இருக்கு.

" வெங்காயத்துடன் வந்தாள் என் தங்கை.வெங்காயத்தைக் கோழிக்குப் போட்டதும் கோழிகள் கொத்தித் தின்ன ஆரம்பித்தன.�

வெங்காயம் காரமடிக்காதா சித்தி கோழிக்கு" என்றான் என் மகன்."அதுக்கு தான் சித்தி பக்கத்துல ஒரு கிண்ணத்தில சக்கரை வெச்சிருக்கேன்...காரமடிச்சா சக்கரை சாப்பிட்டா சரியாப் போயிடும்.எப்படி சித்தியோட அறிவு?" பெருமையுடன் என் தங்கை.

"இதற்கிடையில் என் பாட்டி வந்தார்கள்.கோழி..வெங்காயம்.. எல்லாம் பாத்து பல்செட் வாயால் சிரித்து விட்டு... என்ன புள்ளைங்க நீங்க கோழிக்கு இத்தூண்டு குறுனையப் போடுவாங்களா? அத விட்டுட்டு தயிரு வெங்காயம்ன்னு வெட்டி வேலை பண்ணிட்டு இருக்கீங்க. அப்படியே செடி செத்தை பக்கத்தில மேய விட்டா அது பாட்டுக்கு புழு பூச்சியெல்லாம் கொத்தித் திங்கப் போகுது...வேண்டாத வேலை புள்ளைங்களா நீங்க பண்றது" என்றபடி தொடர்ந்தார்."ஆளுக்கொண்ணாப் புள்ளையும் பெத்துப் போட்டாச்சி...அப்பவும் புத்தியில்லைன்னா எப்பத் தான் உங்க ரெண்டு பேருக்கும் புத்தி வரும்?அக்காக்காரியும் தங்கச்சியும் அப்படியே ஆத்தாவக் கொண்டிருக்கு..ஒண்ணாவது எம்மவன மாதிரி அறிவா இருக்கா....அவனுக்கென்ன விட்டுட்டுப் போயிட்டானே...தங்கமா பேரப்புள்ளைங்களப் பாக்கக் குடுப்பின இல்லையே...கிழவி, நான் இன்னும் இருக்கனே."அறிவுரையுடன் ஒப்பாரி வேற எப்பவும் போல இலவச இணைப்பு.

"மேய விட்டா பூனை புடிக்காதா? இந்த வீதில தான் நெறையப் பூனை இருக்கே?" முன்னெச்சரிக்கை முத்தம்மாவாக என் தங்கை.

"கண் பார்வையிலேயே மேய விடுங்க...புள்ளைங்களை பக்கத்திலிலேயே இருக்கச் சொல்லுங்க" இது பாட்டி.நாங்களும் கோழிக்குஞ்சுகளை மேய விட்டு...தண்ணி காட்டி...என்று அவற்றின் பின்னாலேயே திரிந்து கொண்டிருந்தோம்.கோழிகளுக்கு சாப்பாடு போடும் மும்முரத்தில் எங்கள் பிள்ளைகளுக்குக் கூட வயிற்றுக்குத் தரவில்லை. ஒருவழியாக கோழிகளுக்கான சாப்பாட்டுப் பிரச்சினை முடிந்தாகி விட்டது.

இப்போது தங்குமிடம். எங்கே அடைத்து வைப்பது...இதற்கும் பாட்டியைத்தான் நாடினோம்."அட்டாலில பஞ்சாரமிருக்குது. சாயந்திரமா யாராவது பசங்களை விட்டு எடுக்கலாம். இப்போதைக்கு அட்டைப் பெட்டில போட்டு வைங்க." என்றார்.மிக்சி வாங்கிய போது வாங்கிய அட்டைப் பெட்டியை எடுத்து அதற்குள் பேப்பர் விரித்து கோழிகளை விட்டு மூடினோம்.

"அம்மா...மூடி வெச்சா கோழிக்கு மூச்சு முட்டாதா?" என் மகன்.

"அடடா இது நமக்குத் தோணலையே...தெறந்து வெச்சா பூனை வந்து புடிக்குமே" இல்லாத மூளையைக் கசக்கி யோசித்தாள் என் தங்கை.

சரிடி. ஜன்னல் வெச்சாப் போச்சி. பெட்டியில் ஒரு ஓட்டை போட்டு ஈர்க்கங் குச்சிகளைச் செருகினாள் ஆர்க்கிடெக்டாக என் தங்கை.

இதற்குள் என் அம்மா வந்தார்கள். வந்தவுடன் அவர்களது கைப்பையைப் பிடுங்காக் குறையாய் வாங்கினோம். எப்போது வெளியே போனாலும் எங்களுக்கு எதாவது கொறிக்க வாங்கி வருவது அம்மாவின் வழக்கம். சூடாக உருளைக் கிழங்கு சிப்ஸ் இருந்தது கைப்பையில். அக்காவும் தங்கையும் பிச்சுப் பிடுங்காத குறையாய் சாப்பிட்டு முடித்தோம். இடையிடையே கோழிக்குஞ்சுகளின் பராமரிப்பையும் சாப்பாட்டையும் பற்றிக் கூறியவாறு.

மாலை மயங்கியாகி விட்டது. மதியம், குட்டித் தூக்கம் போட்டு எழுந்த எங்கள் பிள்ளைச் செல்வங்கள்...எழுந்தவுடன் கோழியை வெளியே எடுக்கச் சொல்லி அடம் பிடித்தார்கள். வெளியே எடுத்தவுடன் தெறித்து ஓடின கோழிகள்...சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில்.கோழிக் குஞ்சுகளை கையில் பிடித்து விளையாடுவதும், தலையில் வைத்து, அவை கால்களால் பிறாண்டும் போது எற்படும் குறு குரு உணர்வை ரசிப்பதுமாக பொழுது ஓடியது. கோழிகளுக்கு பேரும் வைத்தாயிற்று. என் கோழியின் பெயர் செரின் , என் தங்கை கோழியின் பெயர் டயானா, என் மகனின் கோழியின் பெயர் சச்சின், என் தங்கை மகளின் கோழி பிங்க்கி.பெயர் சூட்டி, ஆளாளுக்கு கத்திக்கத்தி அவரவர் கோழியின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்ட படி இருந்தோம்.

இதில் "உங்கோழி சோம்பேறி...போடி உங்கோழி தான் திண்ணிப் பண்டாரம்.."என்றெல்லாம் சண்டை வேறு. இரவும் வந்தாகி விட்டது. பிள்ளைகள் உறங்கி விட எனக்கும் தூக்கம் கண்ணைச் சுழற்ற அம்மாவின் பொறுப்பில் கோழிகளை விட்டு விட்டு அப்படியே உறங்கி விட்டேன்.அடுத்த நாள் கண்விழிக்கும் போதே வீட்டில் பேச்சுக் குரல். யாரோ வந்திருக்கிறார்கள் போல என்று நினைத்தபடியே அறையிலிருந்து வெளியே வந்தேன்.

அம்மா கொல்லையில் நின்றிருந்தார்கள். அம்மா காப்பி என்ற படியே அருகில் போனேன். காற்றில் பறந்த படி, தரையெல்லாம் பச்சையும் சிவப்புமாய் இறகுகள். இரத்த தீற்றல்களுடன் கோழிக்குஞ்சுகளின் கால்கள் மட்டும் கிடந்தன. பார்க்கும் போதே என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது."எல்லா அந்த நாசமாப் போற பூன பண்ணின வேலை. அட்டைப் பெட்டிய பெரட்டித்தள்ளி கோழிய எல்லாத்தையும் கொன்னு தின்னுட்டு, கால மட்டும் போட்டுட்டு போயிருச்சு...வரட்டும் சனியன்.. வெச்சுக்கறேன் அதுக்கு" இறக்கையை கூட்டி வாரிய படி அம்மா புலம்பிக் கொண்டிருந்தார்கள். என் தங்கை இன்னும் விழிக்கவில்லை போல.சச்சின்...சச்சின் என் மகன் தூக்கம் விலகாத கண்களுடன் சச்சினை பார்க்கும் ஆவலுடன் எழுந்து வந்து கொண்டிருந்தான்.
__________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக