தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

வியாழன், 11 பிப்ரவரி, 2010

கவிதைத்துடைப்பம்(கதை)

இவன வெச்சு எப்படி சமாளிக்கப் போறமோ?" வெறுப்பு கலந்த சலிப்புடன் தான் அவனை எதிர்கொண்டேன். அவன் கூறிய முகமனுக்குக் கூட பதில் கூட சொல்லவில்லை.அவனைப்பற்றி எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த குறிப்புகள் அப்படி. "சரியான முரடன். வாய் அதிகம். கோபம் வந்தால் தன்னிலை மறப்பான். ஏற்கனவே டெர்மினேசன் வரை போய், யாரோ ஆளைப் பிடித்து டிபார்ட்மெண்ட் மாறி டயட்டரி கிச்சனில் கிளீனராக வந்து சேர்ந்திருக்கிறான். சற்று புத்தி பிசகியவன் வேறு" என்றெல்லாம் அவனைப் பற்றிய செய்திகள் அவனுக்கு முன்பு அவனுடைய சூபர்வைசரான எனக்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தது.

அவன் பெயர் முனீர். வயது 28. என்னை விட 6 மாதம் பெரியவன்.நான் பணியில் சேரும் போது சரியான பேக்கு. பயந்த சுபாவம். இம்மென்றால் கண்கள் குளம் கட்டி விடும். அதே மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருந்த சேச்சிகள் சொன்னதாவது " மகளே...உன் டிபார்ட்மெண்டில் உள்ளது போல கள்ளிகள் எவ்விட காணிணும் இண்டாகில்லா...சூசிச்சு பணியெடுக்கணும்...பங்காளி ஆள்காரரிடத்து, விசமிகிக்க வேண்டாம்...அம்மாரொக்க முக்மாபியா". அதாகப் பட்டதுமருத்துவமனையில் என் டயட்டரி டிபார்ட்மெண்ட் ஆட்கள் சரியான வாயாடிகள். விட்டால் தலையில் மிளகாய் அரைப்பவர்கள்.இதையெல்லாம் கேட்டு வயிற்றில் புளியைக் கரைத்தபடி வேலைக்குப் போனேன். மதிய சிப்ட் இன்சார்ஜ் நான். 26 வயது பெண், 20 பேரை சமாளித்து வேலை வாங்க வேண்டும். என்னைப் பார்த்து பரிதாபப்பட்டே எல்லாரும் ஒழுங்கா வேலை செய்திருவாங்க. என் ஸ்டாப் அவ்வளவு கெட்டவங்க இல்லை. கொஞ்சம் நல்லவங்க தான்.இருந்தாலும் என் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டி இருந்தது. யாரைப்பார்த்தாலும் வலியச் சென்று பேசி சேமலாபம் கேட்டு, ஊர்க்கதை பேசுவேன்..."பிலிப்பைன்ஸ்ல மாம்பழம் கிடைக்குமா...பங்களாதேஸில் என்ன மெயின்தொழில் என்ன ..உங்க ஊரில எப்பப்பா பிரச்சனை தீரும்" என்று எல்லாரிடமும் லொடலொடக்கும் வாயை கட்டுப்படுத்தி," நான் அதிகம் பேஸ் மாட்டேன். செய்து காட்டுவேன் "என்று அஜீத்தின் தங்கையாக ஆகிவிட்டிருந்தேன்.

இப்படியாக நான் ஸ்ரிக்ட் சிந்தாமணியாக ஆன நிலையில் முனீரை என் சிப்டில் போட்டார்கள். எனக்கு அதீத கோபம்... என் மேலாரிடம் போய் ," இருக்கிற நல்ல ஸ்டாப் எல்லாரையும் மார்னிங் சிப்டிலேயே போடறீங்க. புதுசா வர்றவங்களை எனக்குத் தந்தா எப்படி...அதும் இவன் வேற புத்தி சுவாதீனம் சரியில்லயாமே" என்று அழமாட்டாக் குறையாப் பேசினேன்.மேலாளர் சவுதிப் பெண். அவள் சொன்னாள்." பாரு...உனக்கு ருவீனாவப் பத்தி நல்லாத் தெரியும். கோபக்காரி. மூனீரை அவ சிப்டில் போட்டா ரெண்டு பேருடைய சண்டைய சமாளிக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கும். முனீர் ஆத்திரத்தில் அவள அடிச்சிட்டா வம்பு...அதனால் தான் உன் சிப்டில் போட்டேன்,கொஞ்ச நாள் பொறு, மாத்தித்தரேன்.அதிகம் அவனை மிரட்டவோ வேலை வாங்கவோ வேண்டாம், அவனை விரைவில் ரியாத் பணிமாற்ற செய்து விடுவார்கள், கவலைப் படாதே."சமாதானம் ஆகாமலேயே திரும்பி வந்தேன்.

முனீர் இதற்குள் பணிகளை ஆரம்பித்திருந்தான். அப்படி ஒன்றும் மோசமில்லை. அவன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தான்....அதிகம் பேசுவதில்லை. சில நேரம் சக வங்காளிகளுடன் வாய் ஓயாது பேசுவான். சில நேரம் ஊருக்கு கடிதம் போல எதையோ எழுதிக் கொண்டிருப்பான்.சொல்லும் வேலையை விரைவில் முடித்து விட்டு அமைதியாக அவன் வேலையை செய்து கொண்டிருப்பான்.ஒரு வாரம் சென்றிருக்கும்.டயட்டரி கிச்சன் இரைச்சல் நிறைந்தது. வாக் இன் ரெப்ரிஜிரேட்டர்களின் இரைச்சலையும் மீறி பாத்திரம் கழுவும் இடத்திலிருந்து ஒரு பாட்டுக் குரல். பொதுவாகவே வங்காளிகள் பாடிக்கொண்டே வேலை செய்வார்கள்.நன்றாகவும் பாடுவார்கள். ஆனாலும் இது மனதைப் பிசைவது போலும் வங்காளிப் பாடல், உச்சஸ்தாயில் பிசிறின்றி. நான் தானாகவே அந்த இடத்துக்குப் போனேன். முனீர் வங்காளிப் பாடலைத் தன்னை மறந்து பாடியபடி வேலை செய்து கொண்டிருந்தான். சோகப்பாடலுடன் இணைந்து போனதில்கண்களில் சிவப்பு....முனீரின் அருமையான குரலில் ஈர்க்கப்பட்டு அவன் இருக்கும் இடத்திற்குப் போனேன். என்னைப் பார்த்தவுடன் வெட்கச் சிரிப்புடன் பாட்டை நிறுத்தி விட்டு"யெஸ் சிஸ்டர், " என்றான்."முனீர் நீ பாடியது கஜல் தானே...உனக்குப் பாடத் தெரியுமா"எனக்குப் பாட்டெல்லாம் தெரியாது. கேட்டாப் பாடுவேன் அவ்வளவு தான். ஹிந்தி நடிகை காஜல் வேண்டுமானால் தெரியும்."நல்லா பாடற நீ முனீர்.ஆனா இவ்வளவு சத்தமா பாடினியானா, காரிடார்ல கேக்கும். முத்தவா நேரே உள்ள வருவான்.நான் தான் பதில் சொல்லணும். அதனால் சத்தத்தைக் குறைச்சுக்க." நான்."யெஸ் சிஸ்டர்." என்றான்.இங்கே முத்தாவா எனப்படும் மதக்குருமார்கள் தொல்லை கொஞ்சம் அதிகம்.குறுக்கும் நெடுக்கும் நடந்திட்டு இருப்பாங்க.சரியா தலைக்கு முக்காடு இடாத பெண்கள், அல்லது அதீத மேக்கப் செய்த பெண்கள் இவர்கள் கண்களில் பட்டால் போச்சு. கூப்பிட்டு அறிவுரை அறுத்து விடுவார்கள். இவர்கள் பொதுவாக பெண்களை நிமிர்ந்தும் பார்க்க மாட்டார்கள். ஆனால் இப்படிப் பட்ட பெண்கள் அதிகமாக லிப்ஸ்டிக் அணிவது எப்படித் தெரிகிறதோ....ஏதாவது ஸ்பெசல் விசன் பவர் இருக்குமோ. அதன்பின் சத்தத்தைக் குறைத்துப் பாட ஆரம்பித்திருந்தான். உண்மையாகவே நல்ல சாரீரம்.

இரண்டு நாட்கள் கழித்து என் மேளாளர் பெண்மணி என்னைக் கேட்டாள். "முனீர் ஓ.கே.வா?வேறு ஷிப்ட் மாத்தவா அவனை?" என்று."நான் பிரச்சனை எதுவும் இல்லை. மற்றவர்களை விட நன்றாகவே வேலை செய்கிறான்" என்றேன்.

அன்றைக்கு மூடிக்கொண்டிருக்கும் எலிவேட்டரை நிறுத்த மகா புத்திசாலித்தனமாக கதவுகளுக்கிடையே கால் நீட்டியதில், என் ஷூ, எலிவேட்டர் கதவில் சிக்கியது. அதை இழுக்க எத்தனித்ததில் ஒற்றைக் கால் ஷூ ஹீல்ஸ் தனியே கழண்டு வந்து விட்டது.அடக்கொடுமையே...இப்படியே எப்படி நடப்பது?ஒரு காலில் மட்டுமே ஹீல். வார்டுக்குப் போக முடியாமல். அறைக்கே திரும்பி வந்தேன். ஷூவை கையில் செத்த எலியைத் தூக்கியவாறு தூக்கிக்கொண்டு. மனதில் வேறு காலநேரமில்லாமல் கவிதை முளைத்தது. எனது அவசரபுத்தியை நொந்தபடி அமர்ந்திருந்தேன். ஆபாத்பாந்தவனாக வந்த முனீர்,"என்ன சிஸ்டர் இதெல்லாம் ஒரு பிரச்சனையா..குடுங்க ஷூவை"என்று வாங்கியவன் மெயிண்டனன்ஸ் எடுத்துச் சென்றிருப்பான் போல. திரும்பி வரும் போது ஷூவும் ஹீல்ஸும் டைவர்ஸ் காலம் முடிந்து இணைந்து சிரித்தன."தேங்க்ஸ் பிரதர்" என்றேன்.சிரித்தபடி சென்று விட்டான்.

எனக்கு மருத்துவமனையில், போரடித்தால் எழுதுவது வழக்கம். எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன்.அது போலத்தான் அன்றும் எழுதிக் கொண்டிருந்தேன்.ஏதோ கேட்க என் டேபிளின் அருகே வந்த முனீர்,"சிஸ்டர் என்ன எழுதறீங்க" என்றான்.அவனது கேள்வியால், தடைபட்ட கற்பனை ஓட்டம் சற்றே கோபமளிக்க அமைதியாக இருந்தேன்."இது தான் உங்க ஊர் எழுத்தா? நல்லா இருக்கு சன்னா தால் போல...ஏன் மடித்து மடித்து எழுதறீங்க? இது என்ன பாட்டா?" என்றான்.என்ன இத்தனை கேள்வி? எழுதுவது கவிதை என்றால் அதற்கு வேறு அப்படின்னா என்னன்னு ஆயிரம் கேள்வி கேப்பான்,இதில உவமை வேற சன்னா தாலாம்... என்று மனதில் நினைத்தவாறு,"இல்லை முனீர்,லெட்டர் எழுதறேன் ஊருக்கு...பாரு...தரையில சூப் சிந்திருக்கு.கிளீன் செய்யலையா?" என்றேன்.என்ன புரிந்ததோ அங்கிருந்து நகர்ந்து விட்டான். பத்து நிமிடம் கழித்து வந்தான்."சிஸ்டர் பேனா இருக்கா" என்றான்."எதுக்கு,நேற்றுத்தான ஒரு பேனா குடுத்தேன். ஒவ்வொரு முறை லெட்டர் எழுதும் போதும் புதுப்புது பேனா தான் உபயோகிப்பையா, இரு எழுதிட்டுத் தரேன்" என்றேன்.அப்புறம் பிசியில் மறந்தே விட்டேன் அவன் பேனா கேட்டதை.

அன்று இரவு ஏழு மணிக்கு எனக்குப் பணி முடிந்து வீடு திரும்பி விட்டேன்.இரவு பத்து மணிக்கு சரளா என்ற கிச்சன் ஊழியை எனக்கு போன் செய்கிறாள்."சிஸ்டர், இந்த முனீர் கத்தி எடுத்து நம்ம லிசாவை குத்துவதாக மிரட்டினான், லீசா பயந்து.. தப்பித்து ஓடிவிட்டாள் எப்படியோ" என்றாள் சரளா.அய்யோ...ஏழு மணி வரை ஒன்றுமில்லையே. இது என்ன புதுத் தலைவலி.. என்று சலித்தபடியே உறங்கச்சென்றேன்.

அடுத்த நாள் என்ன நடந்திருக்கக் கூடும் என்ற குழப்பத்தூடே பணிமனைக்கு சென்ற என்னை சந்திக்க, காரிலிருந்து இறங்கும் போதேமுனீர் வந்துவிட்டிருந்தான். அனல் கக்கும் பார்வை ஒன்றை அவன் மேல் வீசினேன். என்ன முனீர் உனக்கு அறிவே இல்லையா? கத்தி காட்டி மிரட்டினியா லிசாவை?சிஸ்டர் நேத்து லிசா நீங்க போன உடனேயே ரூமுக்குப் போயிட்டா. பேசண்ட் டிரே 150 ஐயும் நான் தான் கீளின் செய்தேன்.எல்லா வேலையும் நான் செய்து முடித்தவுடன் சாவகாசமாகத் திரும்பி வந்தாள் லிசா. நான் ஏன் வேலைநேரம் வேலையை முடிக்காமல் வெளியே போன? அப்படின்னு கேட்டதுக்கு, என்னை "போடா, பைத்தியகாரா" என்றாள்.நான் கோபத்துடன் கையில் இருந்த கரண்டியை அவள் மேல் வீசுவதற்காக நீட்டினேன். கத்தியெல்லாம் எடுக்கவே இல்லை என்றான் பரிதாபமாக.நான் அவனை நம்பினேன். எனக்குத் தெரியும் லிசாவைப் பற்றி.அவள் இப்படி செய்யக்கூடிய பெண் தான்.சரி முனீர் என்னுடன் வா. நான் பேசுகிறேன், என்று அழைத்துச் சென்றேன் சௌதி தலைமையிடம், ஒரு வழியாக அவளுக்கு விளக்கி எல்லாரையும் அழைத்து " சண்டை போடக்கூடாது, நீங்கள் அனைவரும் வேறு வேறு இடத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்..ப்ளா..ப்ளா..."என்றெல்லாம் அவள் லெக்சர் கொடுத்தபின் அப்பாடா என்று கலைந்தோம்.லிசாவை பெர்சனலாக கண்டித்தேன். அடுத்த நாளே எல்லாம் சரியாகிப் போய் விட்டது.

மறுபடியும் கல்லூரி போல களைகட்டிவிட்டது டயட்டரி.அன்று எதற்காகவோ முனீரை பலமாகக் கடிந்து கொண்டேன். நான் கடிந்து பேசுவது அரிது. சண்டை போட்டாலும் வழிய சமாதானத்திற்கு போய் விடுவேன்.அப்படித்தான் முனீர் இனி இப்படி செய்யாதே என்று அவனைப் பார்த்துக் கூறும் போது, அவன் கேண்டீனில் அமர்ந்திருந்தான். கையில் ஏதோ புத்தகம். வார, மாத இதழ் ஏதோ போல....என்று நினைத்தவாறு,அட்டையைப் பார்த்தால், அட்டையில்...தெரிந்த தாடி வைத்த முகம்....எங்கோ பார்த்த முகம்."என்ன புத்தகம் இது முனீர்?" என்றேன்.இது ரபீந்தரநாத் கவிதைகள் என்றான் பாருங்கள்...என் முகத்தில் ஈயாடவில்லை.ரபீந்தரநாத் தாகூர் கவிதையா...நிஜமாகவே அதிர்ச்சியாகத் தான் இருந்தது. கையில் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். ஜிலேபி பிழிந்தது போல வங்காளி எழுத்துக்கள். அட்டைப்படத்தில் ரபீந்திரநாத் தாகூர் தாடியுடன்.கவிதையெல்லாம் படிப்பியா நீ? ஏன் என்னிடம் சொல்லலே?சிஸ்டர்... உங்களுக்கு கவிதைன்னா என்னன்னு தெரியுமா? பிடிக்குமா? உங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சேன்.இது அவன் முறை.

காத்து அவன் பக்கம் .இல்ல, முனீர் கொஞ்சம் தெரியும். சரி இங்க எப்படி உனக்கு புத்தகம் கிடைக்குது...ரொம்ப விலை அதிகமாச்சே...
அதுவா...ஊருக்கு யார் போனாலும் புக்ஸ் தான் வாங்கிட்டு வரச் சொல்லுவேன். நானும் எழுதுவேன்.
அடப்பாவி, நீ எழுத வேற செய்வியா? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தராதே...எனக்கு நெஞ்சு வலி வரப்போகுது.
நாளைக்கு நான் எழுதுனதெல்லாம் எடுத்துட்டு வர்றேன். நிறைய எழுதி வெச்சிருக்கேன். 10 ஆம் வகுப்பிலிருந்து எழுதறேன். எங்கிட்ட ஆங்கில கவிதை புத்தகங்கள் கூட இருக்கு. வேணுமா உங்களுக்கு?
அந்த புத்தகத்தைப் பிரித்து ஒரு பக்கத்து கவிதைக் காட்டி இதென்ன கவிதை என்று கேட்டேன்.
இது பணத்தைப் பற்றிய கவிதை. ஏழை ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும் என்பது பற்றியது, என்று அரபிங்லீஸில் விளக்க ஆரம்பித்தான்.

ரசித்துப் படிப்பவர்கள், கவிதையைப் பற்றி விவரிக்கும் போது...சற்றே உணர்ச்சிவசப்படுவார்கள். அதே போல ஏற்ற இறக்கம் கொண்ட குரலில் அவன் அதைப் படித்து விவரிக்கவும்....உறைந்தே போனேன்.

அடடா...முனீர், எனக்கு உன் லேங்குவேஜ் தெரியாது. தெரிஞ்சிருந்தா நல்லா இருக்கும்.நீ படி.என்று சொல்லிவிட்டு கிளம்ப நினைக்கையில்,

"சிஸ்டர் ஒரு நிமிசம்,எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?""என்ன முனீர்?""

இந்தியாவில் வெள்ளிக் கொலுசு அழகாகக் கிடைக்குமாம். எனக்கு ஒரு ஜதை வேண்டும் யாரேனும் அங்கிருந்து வருபவர் இருந்தால் அனுப்பச் சொல்லுங்களேன். பணம் தந்து விடுகிறேன்".
"யாருக்கு?""இந்த வெகேசனில் அநேகமாக எனக்கு கல்யாணம் இருக்கும். கல்யாணப் பொண்ணுக்குத்தான் கொலுசு.
""அட,பொண்ணுப் பாத்தாச்சா? எங்கே பொண்ணு...உங்க ஊரா...இல்லை இங்கத்த பொண்ணா?"
"பொண்ணெல்லாம் ரொம்ப வருசத்துக்கு முன்னாலேயே பாத்தாச்சு...டீச்சரா இருக்கு...பங்களாதேசில்.10 வருடக் காதல்.பேரு ரஸியா."
"அடி சக்கை...நான் எதிர்பார்க்கவே இல்லை...கண்டிப்பா போட்டோ வெச்சிருப்பியே வாலெட்ல...காமி பாக்கலாம்..ரொம்ப அழகா?"
"அழகா...?என்ன இப்படி கேட்டிட்டீங்க...?அந்த மாதிரி ஒரு மூக்கு முழிய நீங்க பாத்திருக்கவே மாட்டீங்க...கத்தி மாதிரி கூர்மையான மூக்கு...உங்க மூக்கெல்லாம் சப்பை மூக்கு சிஸ்டர். "
"சரிதான், அதான் கத்தி மூக்கு மனசக் குத்திக் கிழிச்சிருச்சு போல..."
"மூக்கில ஒரு மூக்குத்தி வளையம் போட்டிருப்பா பாருங்க...அதில மனசு மாட்டிட்டு ஊசலாடும்....கண்ணு இருக்கே...."
"சரி...சரி...என் கல்யாணப் பரிசா உன் ஆளுக்கு கொலுசு கேரண்டி. இப்ப வேலையப் பாக்கலாம். அப்புறம் வர்ணிப்பாயாமாம்."

சிரிப்புடன் இருக்கைக்குத் திரும்பினேன்.அடுத்த நாள் எதேச்சையாக மற்றொரு வங்காளி அகமதுவிடம் முனீர் கல்யாணம் பற்றி விசாரித்தேன்."என்ன அகமது...முனீருக்கு இந்த வெகேசனில் கல்யாணமாம்...உன் தோழன் தான...நீ போறயா கல்யாணத்துக்கு?"

"கல்யாணமா...யாரு சொன்னா? முனீர் சொன்னானா?"அகமது.

"ஆமாம்...பொண்ணு பேரு கூட ரஸியாவாம். எனக்கு பிடிச்ச பேரு அது." நான்.



சிஸ்டர்...அது பெரிய கதை...இவனும் ரஸியாவும் பள்ளிக்கூடத்திலிருந்தே லவ் பண்ணினாங்க. முனீர் நல்ல பணக்கார வீட்டுப் பையன்.திடீருன்னு அப்பா இறந்ததில்...வியாபாரம் நட்டமாகி...தெருவுக்கு வந்திட்டாங்க. இவன் படிக்க முடியாம...கிடைச்ச விசாவ வாங்கிட்டு சௌவுதில கிளீனர் வேலைக்கு வந்திட்டான்.இப்ப தம்பியப் படிக்க வைக்கிறான்,போன வாரம் கூட தம்பிக்கு கம்ப்யூட்டர் வாங்கி அனுப்பினான். சரி, நல்லது தான?ஏதோ இவனும் சம்பாதிக்கிறான் தானே அகமது. அந்த குடும்பம் தலை நிமிரும் இல்லையா?அந்தப் பொண்ணு ரஸியா...டீச்சர்...இவங்க நிலை இப்படி ஆனவுடன், வீட்ல பாத்த பையனக் கல்யாணம் செய்துருச்சு...இப்ப ஒரு குழந்தையும் இருக்கு அதுக்கு. அந்த சேதி கேட்டதிலிருந்து இவனுக்கு கொஞ்சம் சித்தம் பேதலித்து விட்டது.இவன் அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆனதை ஒத்துக்கவே மாட்டேங்கிறான், புடவை,வளையல்ன்னு பைத்தியகாரன் மாதிரி வாங்கி சேத்துகிட்டிருக்கான். இவனுக்கு அடிக்கடி தற்கொலை பண்ணிக்கிற மாதிரி கனவு வேற வரும். பயங்கரமா கத்துவான்.

பேச வார்த்தை வரவில்லை. கண்கள் நீர் தேக்கியது.எனக்குப் பிடித்த பெயர் ரஸியா....சட்டென்று பிடிக்காமல் போனது.சைக்யாட்ரிஸ்ட் பாக்கலாமா அகமது? ட்ரீட் செய்தா சரியாப் போகும் தான?சிஸ்டர்...நம்ம சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட நாங்கெல்லாம் கூட்டிட்டுப் போனோம். இவன் என்னடான்னா அங்க போயி அந்தம்மாவப் பேசவிடாம ஒரு மணி நேரம் இவனே பேசினான். அந்தம்மா இவன விட சரியான லூஸு, பெர்சனல் டிபார்ட்மெண்டுக்கு, இவனை டெர்மினேட் செய்வது தான் நல்லதுன்னு மெயில் அனுப்பிருச்சு.

அப்புறம் நாங்கெல்லாம் கெஞ்சிக் கூத்தாடி, மறுபடி வேலைக்குச் சேர்த்தோம். என்ன செய்ய? எல்லாம் விதி.அகமது அந்த இடத்தை விட்டு அகன்றான்.

சிலை போல சமைந்து அமர்ந்திருக்கையில் முனீர் வந்தான், துடைப்பமும் கையுமாய்.அந்த பெரிய ஹாலைத் துடைக்க ஆரம்பித்தான். வாய் கொள்ளா புன்னகையுடன்..ஹிந்திப்பாடலை முணுமுணுத்தவாறு,நான் அருகில் சென்றேன்.

என்ன முனீர் ஒரே சிரிப்பு...என் குரல் இளகியிருந்தது.

"சிஸ்டர்...உங்க கிட்ட மட்டும் சொல்றேன்.நீங்க மட்டும் தான் என்னைப் புரிஞ்சிப்பீங்க...இந்த அழுக்குத்தரையைத் துடைக்கும் போது...தரையில் சில நேரம் ரஸியாவின் முகம் தெரியும்.....என் துடைப்பம் அழகான காதல் கவிதையாய்...அவள் முகம் வருடிச் செல்லும். இது காதல் துடைப்பம் சிஸ்டர்....." தொடர்ந்து பாடியபடி வேகமாகத் துடைக்க ஆரம்பித்தான்.சாத்தியமேயில்லை.....

இன்னும் எத்தனை காதல் துடைப்பங்களோ....கழிவுகள் துடைக்கும் பணியில்.....

நல்லதோர் வீணை செய்து நலங்கெடப் புழுதியில் எறிந்து விட்டாய்.........

2 கருத்துகள்: