தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

வியாழன், 11 பிப்ரவரி, 2010

கதை கதையாம் காரணமாம் (கதை)

கமலாவின் மனது உலையில் போட்ட அரிசியென பொங்கிப் புகைந்து கொண்டிருந்தது. புசுபுசுவென மூச்சு விட்டபடி, பேப்பரும் பேனாவுமாக ஹாலின் குறுக்கே நடந்து கொண்டிருந்தாள். எப்படி சொல்லலாம் என்னப் பார்த்து...என்னப் பத்தி என்ன தெரியும் இவளுக்கு ... பேச வந்துட்டா பேச...நாங்கெல்லாம் எட்டையபுரத்தில... பாரதிக்கு பக்கத்து வீடுடி, ஆனானப்பட்ட பாரதியோட பாட்டியே, எங்க பாட்டியப் பார்த்து. என்னமா எழுதறீங்க நீங்கன்னு கேட்டிருக்கா தெரியுமா?அடுப்பில் போட்ட கடுகாய் வெடித்துக் கொண்டிருந்தாள் கமலா.

"என்ன நடந்ததுன்னு சொல்லாம நீயே புலம்பிட்டிருந்தா எப்படி?சொன்னாத்தானே தெரியும்...இந்தா இந்த ஜூஸை வாங்கிக் குடிச்சிட்டு, பொறுமையா சொல்லு" இது கமலாவின் கணவன் பட்டாபி.

அந்த கோடிவீட்டு குமுதாயில்ல...அவள இன்னைக்கு லேடிஸ் கிளப்பில பார்த்தேன்னா...வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சிட்டிருந்தா..என்னன்னு கேட்டா எதோ இவ சமையல் குறிப்பாம்..அது மங்கையர் மலர்ல வந்துடுச்சாம்...என்னமோ கின்னஸ் ரிக்கார்டு பண்ணனாப்ல...இருனூறு மங்கையர்மலர் வாங்கி காலனி முழுக்க இலவசமா படிக்கக் குடுக்கிறான்னா...கேட்டேளா இந்த அக்கிரமத்த? கேக்கிறப்ப எல்லாம் பூம்..பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு காசை எடுத்துக் குடுக்கிறான் அவ ஆம்படையான்...நீங்களும் தான் இருக்கேளே?

"சரிடா செல்லம் இதில நீ கோபப்படற மாதிரி என்ன ஆச்சி?" பட்டாபிகுறுக்கே பேசாதீங்கோன்னா..அப்புறம் எனக்கு கோர்வையா சொல்ல வராது...நானும் குமுதா இந்த அலட்டு அலட்டுறாளேன்னு "இது என்னடியம்மா பெரிய விசயம்?நானெல்லாம் எழுதாத கதையா? ...கட்டுரையா? ஒரு காலத்தில என் பேரு வராத பத்திரிக்கையே இல்லன்னு" ஒரு பிட்டத் தான்னா போட்டேன்.அதுக்கு அவ "டெலிபோன் டைரக்டரி, கல்யாணப் பத்திரிக்கை, பூப்பு நன்னீராட்டு விழாப் பத்திரிக்கை இதெல்லாம் பத்திரிக்கை கணக்கில வராது மாமி " ன்னு சொல்லிட்டு என்ன நக்கலாப் பார்த்தான்னா...சுத்தியிருந்த மூதேவிங்க வேற கொள்ளுன்னு சிரிக்குதுங்கள்..எனக்கு இப்ப நெனைச்சாலும் அவமானம் புடிங்கித் தின்றதுண்ணா...

"சரிடா இதெல்லாம் நோக்கு சகஜமான விசயம் தானே...நீயா எதுக்கு துண்டக் குடுத்து துப்பட்டிய வாங்கிக்கிற? "இது பட்டாபி.

"அய்யோ,அய்யோ.. நீங்க எப்பவும் என்னத்தாண்ணா குறை சொல்லுவேள்..உலகத்திலிருக்கிற அத்தனை பொம்மனாட்டியும் நல்லவா உங்களுக்கு...நாந்தான் கெட்டவ...வீட்டுக்குள்ளயே எனக்கு எதிரிய வளர்த்து வெச்சிருக்கேனே...அப்பவே சொன்னா எங்க பாட்டி...பட்டாபி.. கொட்டாவின்னுகிட்டு பேரே நல்லாயில்ல..இவனக் கட்டாதேன்னு...கண்ணைத் திறந்திட்டு இருக்கிறப்பவே அந்த ஈஸ்வரன் என்ன குழில தள்ளிட்டானே"சூடு பிடிக்கிறது அழுகை...

"சரி,சரி அழாதே..இப்ப என்ன பண்றது? நீயே சொல்லு" பவ்வியமாய் பட்டாபி.எது எப்படிப் போனாலும் எனக்குக் கவலை இல்லை...நானும் ஒரு கதை எழுதனும். அது அவள் விகடன்ல வரணும். நானூறு அவள் விகடன் வாங்கி நானும் ஊருக்கே இலவசமாக் குடுக்கணும்...குமுதா ஆம்படையான் மாதிரி, அவ எழுதறப்ப எல்லாம் கண்ணு முழிச்சு காபி போட்டி குடுக்காட்டியும் பரவாயிலை...,என்னை டிஸ்கரேஜ் பண்ணாதேள் அது போறும்.குமுதா வீட்டு வேலைக்காரி மினிம்மா சொன்னா...அந்த சமயல் குறிப்ப எழுதினதே குமுதா ஆம்படையான் தானாம்...ஒரு வாரம் ஆராய்சி பண்ணி நார்த் இண்டியன் சமையலையும்...சவுத் இண்டியன் சமையலையும்...சைனீஸ் கூட மிக்ஸ் பண்ணி புது வெரைட்டி குடுத்தானாம்...நீங்களும் இருக்கேளே...ஒரு ரசம் வெக்கக் கூடத் துப்பில்லை...பொரியல் பண்ணுங்கன்னா உசிலி பண்றேள்...உசிலி பண்ணுங்கண்ணா அவியல் பண்றேள்..ஒரு சாதமாவது வடிக்கத் தெரியறதா...அதையும் குழைச்சு வெக்கறேள்...எல்லாம் உங்கம்மாவைச் சொல்லணும்...வணங்காம வளத்தி விட்டுருக்கா...இப்ப நாந்தான படறேன்...அது முடிஞ்சு போன கதை...நான் ஒண்ணும் சமையல் குறிப்பு எழுதற ஆள் கிடையாது...நான் எழுதற கதையால ஆஸ்கர் அவார்டு வீடு தேடி வரணும்...ஆஸ்கார் விருது வாங்கியே தீருவேன் என்ற மனைவியை அதிர்ச்சியுடன் பார்த்தார் பட்டாபி."கதைக்கெல்லாம் ஆஸ்கார் கொடுக்க மாட்..." பாதியுடன் வாயை மூடிகொண்டு பேஷ்...பேஷ் பிரமாதம் என்றார். வாயை விட்டு அதுக்கு வேற வாங்கிக் கட்டணுமா என்ன?கதை எழுதறதுன்னு முடிவு பண்ணியாச்சு. நல்ல மேட்டர் வேணுமே? மூளையை கசக்கி, துவைத்து, அலசி, சொட்டு நீலம் போட்டு... யோசித்தாள் கமலா.

இத்தனை நேரம் சொப்பு விளாண்டுட்டிருந்த கமலாவின் கடைக்குட்டி மீனு ஓடி வந்தாள். அம்மா பத்திரிக்கைக்கு எழுதப் போறீயா? எனக்கு கூட நிறையப் பாட்டு தெரியும்... நான் சொல்றேன்... நீ எழுது... நாந்தான் உனக்கு சொல்லிக் குடுத்தேன்னு மட்டும் யார்கிட்டயும் சொல்லப்படாது... சரியா?"தோ...தோ நாய்க்குட்டி... துள்ளி வா..வா.. நாய்க்குட்டி" என்று ராகம் போட்டு ஆரம்பித்தாள்.

சனியனே... வந்து வாச்சிருக்கு பாரு எனக்குன்னு... அந்தண்டை போ.. தொப்.. தொப் என்று முதுகில் அடிவாங்கியதில் அழுது கொண்டே அப்பாவிடம் ஓடினாள்.

"அவள ஏம்மா அடிக்கற? கதை வேணும்னா எங்கிட்ட கேக்க வேண்டியது தானே..?" மேதாவித் தனமா பேசறானே இது கமலாவின் புத்திர சிகாமணி வெங்கி.

அம்மா இதப் பாரு... இப்ப ஹாரி பாட்டர் கதைதான் ஹாட் டாபிக். அதையே சாரி பாட்டர்ன்னு மாத்திர வேண்டியது தான்... நம்ம அம்புஜம் பாட்டி தான் சூனியக்கார கிழவி.... மோதிரத்தை அடிச்சுண்டு துடப்பக் கட்டைல ஏறிப் பறந்துண்டே போறா... நம்ம விச்சு தாத்தா ஒட்டடக் குச்சில துரத்திண்டு போறார்... எப்படியிருக்கு ஓப்பனிங்?

"ஏண்டா அம்மா இப்பத்தான் மொத கத எழுதறா? எடுத்தவுடனே அபசகுனமா தொடப்பக்கட்டை. வெலக்குமாறுன்னு அச்சு பிச்சுன்னு ஒளரிண்டு... நல்ல தண்ணி சொம்பு.. இல்லை பசுமாடு வராப்ல ஸ்டார்டிங் வெக்கக்கூடாதாடா அம்பி?" இது பட்டாபி.

"ரெண்டு பேரும் செத்த வாயை மூடறேளா? வீட்ல நா ஒருத்தி இருக்ககேன்றதையே எல்லாரும் மறந்துட்டேளா? இது மூத்த குமாரத்தி வனஜா. அம்மா நோக்கு நான் சொல்ல மாட்டேனா நல்ல கதை? கேளு... நம்ம அம்புஜம் பாட்டி அடிக்கடி சொல்லுவாளே.. தேங்காய் சட்னி அரைக்கறச்ச பொட்டுக்கடலைய சிந்தாம அரைன்னு.. நீதான் வாய்க்கு கொஞ்சம்... கல்லுக்கு மிச்சம்ன்னு அரைப்பியே... அப்படி அரைக்கறச்ச ஒரு பொட்டுக்கடலை கீழே விழுந்துடுத்து... அது அப்படியே உருண்டுட்டு வீடு வீடாப் போயி நீயும் பாட்டியும் போடற சண்டையப் பத்தி கோள் சொல்லுது. அதான் கதை . எப்படி இருக்கு?"

நிறுத்து..நிறுத்து... இதே கதையத்தான அந்த சுசித்ரா பொண்ணு குறு மிளகின் கதைன்னு எழுதிச்சு" இது பட்டாபி.

அதாருண்ணா சுசித்ரா எனக்கு தெரியாம? திடுக்கிடுகிறாள் கமலா.."அதான் கமலு... ரேடியோ மிர்சில வருமே... வெடவெடன்னு... முருங்கக்கா மாதிரி... மூக்கு மட்டும் எடுப்பா இருக்குமே.. அந்தப் பொண்ணுதான் குறுமிளகின் கதைய எழுதிச்சி.. அவார்டு கூட வாங்கிச்சே..", இது பட்டாபி..

நேக்குக் கூடத் தெரியாம எப்படிதான் இப்படி பொது அறிவு பொங்கித்தோ உங்களுக்கு? அந்தக் கதை வேண்டாண்டி... அப்புறம் காப்பி அடிச்ச கதைன்னு கேஸ் போடுவாள்.. கோர்ட்டு படியேறாத குடும்பம்டி இது.ஏன்னா! உங்க தங்கை எதித்த ஆத்துக்காரனோட ஓடிப்போனாளே அதைக் கதையா எழுதட்டா?"

அடிச்சண்டாளி.. .குடும்ப மானத்தை பத்திரிக்கை வரைக்கும் கொண்டு போகத் துணிஞ்சிட்டாளே உன் பொண்டாட்டி... ஏண்டியம்மா உன் பொறந்தாத்தில ஓடிப்போகாத கதையா? அதையே எழுதிடியம்மா... ஏம்மா எம்மகளை வெச்சுத்தான் நீ கதை எழுதி... பெரிய்ய்ய்ய்ய கதாசிரியர் ஆகணுமா?".. .இது பட்டாபியின் அம்மா அம்புஜம்.

நீ வேற சும்மாயிரும்மா... அதையெல்லாம் கமலி எழுதமாட்டா? இல்ல கமலு?"

ஆமா அப்படியே எழுதிட்டாலும்..", நொடிக்கிறாள் அம்புஜம் பாட்டி.

இத்தனை களேபரத்திற்கிடையில் என்ட்ரி குடுக்கிறார்... பட்டாபியின் தந்தை விச்சு... "என்னம்மா மருமகளே கதைதான வேணும்.... முக்கு வீட்டு தமிழ் வாத்தியார் என் ஃபிரண்டு தானே அவன் கிட்ட கேட்டா சொல்லப்போறான்... "

சொல்லி வாயை மூடவில்லை."அந்தாளு சாதாரண வாத்தியாரில்லை... லொள்ளு வாத்தியாரு... மடிசார் கட்டிண்டு நான் நடந்து போறச்சே.. மொறைச்சு பாத்திண்டே "போட்டிருக்கும் மடிசார் வேசம் பேஷாப் பொருந்துதே... எனது பார்வை கழுகுப் பார்வை தெரிஞ்சுக்கோன்னு பாடறான்னா" கழுகுப் பார்வையாமா... சரியான கொரங்குப் பார்வை... பி.வாசு பையன்னு நெனப்பு...
ஏன்னா நான் அவ்வளவு அழகாவா இருக்கேன் மாம்பழ மடிசார் கட்டுல..?

அப்படியில்ல கமலு... உன்னைப் பார்த்தா வாத்தியோட செத்துப்போன எள்ளுப் பாட்டிய பாத்த மாதிரி இருக்காமா... அதனால தான் வாத்தி அப்படிப் பாத்திருக்கார்..இதை இப்படியே விட்டா சரியாகாதென புரிந்து கொண்ட பட்டாபி...என்ன கமலு... யோசிச்சு யோசிச்சு கண்ணுக்குக் கீழே கருவளையமே போட்டிடுத்து போ... எளம் வெள்ள்ரிக்கா நறுக்கி வெச்சிருக்கேன்... அதை கண்ணில வெச்சிட்டு தூங்கினா கனவில நல்ல கதையா தோணும்... என்று எஸ்ஸாகிறார்.

மறுநாள் காலை... பயத்துடன் எழுந்து வருகிறார் பட்டாபி.எண்ணன்ணா... எழுந்துட்டேளா? சூடா உங்க கையால காப்பி போட்டுண்டு வாங்க...

காப்பியுடன் வரும் பட்டாபி... என்னடா செல்லம்... ஏதாவது கதை கிடைச்சுதா?

கதையா...?அதெல்லாம் வேலையில்லா பொம்மனாட்டி பண்ற வேலைன்னா... எனக்கு மணி, மணியா புள்ளைங்க இருக்கு... கண்ணுக்கு நெறைவா நீங்க இருக்கேள்... உங்களையெல்லாம் கவனிக்கறத விட்டுட்டு கதை,கத்திரிக்காய்ன்னு டயத்த வேஸ்ட் பண்ணச் சொல்றேளா?பேப்பர் செலவு, போஸ்டல் செலவுன்னு ஆம்படையான் சம்பாதிக்கறத விசிறி அடிக்கற பொம்மனாட்டி நான் இல்ல...

எதிர் பாராத திடீர் திருப்பத்தால அதிர்ந்து நிற்கிறார் பட்டாபிஆனான்னா... பெரிசா இல்லன்னாலும் இந்த வைரமுத்து, பா.விஜய் அளவுக்கு கவித என்னால எழுத முயும்னு நெனைக்கிறேன்.... கவிதைல ஒரு அட்வான்டேஜ் இருக்குண்ணா... பக்கம் பக்கமா எழுத வேண்டியது இல்லை.. நாலு வரி யாருக்கும் புரியாத மாதிரி எழுதினாப் போறும்... பக்கத்துக்கு நாலு லைன்... நாப்பது பக்கம்... புஸ்தகமே போட்டுரலாம்.... அதாண்னா ஃபேஷனே.... மூச்சு விடாமல் தொடர்கிறாள்.அதிர்ச்சி தாங்காமல் மயக்கம் போட்டு விழுகிறார் பட்டாபி

1 கருத்து: