தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

வியாழன், 11 பிப்ரவரி, 2010

அறை எண் 406 (கதை)

இன்றைய பொழுது இனிதாக விடியவில்லை எனக்கு. யார் முகத்தில் முழித்தேனோ தெரியவில்லை, மருத்துவமனைக்குச் செல்லும் வழியெல்லாம் ஒரே ட்ராஃபிக்.சவூதி மன்னர் எங்கள் நகருக்கு விஜயம் செய்கிறார் பராக்.. பராக்.. எனவே காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்த காவல் வாகனங்களைத் தாண்டி, சுற்றிச் சுற்றி ஊரையே வலம் வந்து மருத்துவமனைக்குள் நுழையும் போது 1 மணி நேரம் லேட்.நுழைந்தவுடன் கடுவன் பூனை போல முகத்தை வைத்துக் கொண்டு நான் எப்படா வருவேன் என்று காத்துக் கொண்டிருந்தாள் என் சீஃப் டயடீசியன். அவள் பிலிப்பின் நாட்டைச் சேர்ந்த பேரிளம் பெண், தேவதை கொஞ்சம், ராட்சஸி மிச்சம் கலந்து செய்த கலவை. வயதோ 45, கேட்டால் போன வாரம் தான் 25 ஆம் வயதை வழி அனுப்ப கேக் வெட்டியதாகச் சொல்வாள்.எப்போதும் மேக்கப் கலையாத முகம், எப்போதாவது சிரிக்கும் உதடுகள். கையில் ஒரு ஃபைலை வைத்துக் கொண்டு எப்போதும் ஓடிக் கொண்டிருப்பாள். பாத்ரூம் போனாலும் கையில் ஃபைல் இருக்கும். அவளுக்கு நான் வைத்திருக்கும் பட்டப் பேர் "ஃபைல் பட்டம்மா�"லேட்டாக வந்த என்னைப் பார்த்து அவள் சிரித்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நானும் அவளைப் பார்த்து "கமுஸ்தஸ்கா�?" என்றேன். பிலிப்பைனி மொழியில், எப்படியிருக்கிறாய்? என்று பொருள். "சரி,சரி 406 ஆம் அறைக்கு ஓடு, சூசைட் அட்டெம்ப்ட் கேஸ், டயட் கவுன்சலிங் தேவையாம்" என்றாள். அவள் ஏன் என்னைப் பார்த்து சிரித்தாள் என்று இப்போது தான் எனக்குப் புரிந்தது. 406 என்னுடைய வார்டு அல்ல. அது அவள் பார்க்க வேண்டிய பேஷன்ட். நான் யோசிப்பதைப் புரிந்து கொண்டாள் போலும். அது என் வார்டு தான். ஆனால் எனக்கு கொஞ்சம் அவசரவேலை இருக்கிறது, அதனால் நீ அட்டென்ட் செய்... என்றாள். எனக்குத் தெரியாதா? அவளுக்கு என்ன அவசர வேலை என்று? ரெஸ்ட் ரூம் போய் போட்ட மேக்கப்பைக் கலைத்து மீண்டும் போடுவது தான்.இருந்தாலும் கால தாமதமாக வந்ததற்கு தண்டனையை அனுபவித்துத்தான் தீர வேண்டும். சீருடையை திருத்திக் கொண்டு கிளம்பினேன். 406 ஆம் எண் அறை நான்காவது மாடியில் இருக்கிறது. எலிவேட்டரைத் தவிர்த்து மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தேன். யாருமே உபயோகிக்காத மாடிப்படிகளில் தனியே ஏறிச் செல்லுவது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று.குறிப்பிட்ட அறைக்குச் செல்லும் முன் நோயாளியைப் பற்றிய விபரங்களை கேட்டறிய நர்சை அணுகினேன். நர்ஸ் கேரள தேசத்து பெண். அவளிடம், என்ன கேஸ் இது சேச்சி? என்றேன். அதற்கு அவள் "அது பிசாசானு, அவிட போகன்டா மோளே... அப் பெண்குட்டி புத்தி பேதலிசசு போயி. இது நின்ட வார்டு இல்லல்லோ, எந்தினா இவிட வந்தது?...�, என்றாள் பட படப்புடன். அவளிடம் மலையாளத்தில் சம்சாரித்ததிலிருந்து தெரிந்து கொண்டவை.....பேசண்டின் பெயர் முனீரா. சவுதிப் பெண், கை நரம்புகளைத் துண்டித்து தற்கொலை முயற்சி. அதிக இரத்த சேதம் இல்லாததால் பிழைத்துக் கொண்டாள்... உடல் எடையைக் குறைக்க உணவு ஆலோசனை தேவைப்படுகிறது.காலையிலேயே என் தலைவி ஃபைல் பட்டம்மா, முனீராவிடம் கவுன்சிலிங்காகப் போய் இருக்கிறாள். போன சமயத்தில் முனிரா �ஒரு கையில் கோக்கும், மறு கையில் கேக்குமாக� வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறாள்... சும்மா விடுவாளா ஃபைல் பட்டம்மா... உனக்கிருக்கிற உடம்புக்கு இதெல்லாம் சாப்பிடக் கூடாது என்று பிடுங்கி வைத்து விட்டு அறிவுரையை அள்ளித் தெளித்திருக்கிறாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பின் பொங்கி எழுந்த முனிரா, பெரிய கோக் டின்னை இவள் மேல் விசிறி அடித்திருக்கிறாள். நல்லவேளை அது அவள் மேல் படவில்லை... பட்டிருந்தால் ஃபைல் பட்டம்மா ... தலையில் பெரிய கட்டம்மா� என்று பாடியிருக்கவேண்டியது தான். நடந்ததையெல்லாம் மறைத்து, என்னையும் முனீராவிடம் அனுப்பியிருக்கிறாள். இப்ப சொல்லுங்க, அவளை ராட்சஸி என்று நான் சொல்லுவேனா, மாட்டேனா?இதையெல்லாம் கேட்ட எனக்கு கிலி பிடித்தது."சேச்சி எண்ட கூட வரூ� என்று நர்ஸையும் அழைத்துக் கொண்டு அறை எண் 406 ஐ அடைந்தேன். கதவைத் திறந்து வழக்கம் போல் முகமன் கூறினேன்.அங்கே முனீராவைப் பார்த்த நான் அசந்து போனேன். 20 வயதுப் பெண். குழந்தை தனம் மாறாத அழகான வட்ட முகம், களையான பச்சைநிற கண்கள் என்று ஒரு மெகா சைஸ் பூங் கொத்தாக, ஒரு தேவதைபோல அமர்ந்திருந்தாள் முனீரா.. என்ன கொஞ்சம் குண்டு தேவதை... உடல் எடைதான் 100 கிலோ இருக்கக் கூடும். இடது கையில் கட்டு... வலது கையில் ஒரு பெரிய லேய்ஸ் சிப்ஸுடன், அறையிலுள்ள டி.வியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளுடன் அவள் பெற்றோரும் இருந்தனர்.அவர்களிடம் என்ன பிரச்சனை என்றேன் அரபியில். எதிரில் அசிரத்தையாக நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு சவுதி உடைந்த ஆங்கிலத்தில் பேசத் துவங்கினான்.அதாகப்பட்டது, அந்த சவுதியின் பெயர் சாலேஹ். அவன் மனைவிதான் முனீரா. திருமணத்திற்குப் முன் ஒல்லியாய் அழகாய் இருந்த முனீரா திருமணத்திற்குப் பின் குண்டாகி விட்டாளாம். அதிக எடை காரணமாக முனீராவை சாலேஹ்க்கு பிடிக்காமல் போய் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உத்தேசித்துள்ளானாம். இதை அறிந்த முனீரா கை நரம்பை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள்.இதை விசாரித்து முடிப்பதற்குள் சிப்ஸை முழுதுமாக முடித்திருந்தாள் முனீரா. இது என்னுடைய நேரம்... நான் அதிகம் பேச வேண்டிய நேரம்...நர்ஸ் என்னை முனீராவிடம் அறிமுகப் படுத்தினாள்.. நான் அவள் உணவைப் பற்றித்தான் பேசப்போகிறேன் என்று தெரிந்து கொண்ட முனீரா, பாம்பைப் பார்த்த கீரியைப் போல என்னுடன் சண்டைக்கு வர ஆயத்தமானாள். நான் முனீராவிடம் முதலில் பேசிய வார்த்தைகள் "நீ ரொம்ப அழகாயிருக்கிறாயே... உனக்கு லேய்ஸ் சிப்ஸில் எந்த ஃபிளேவர் ரொம்ப பிடிக்கும்?..�, என்றேன்.முனீரா மொத்தமாக நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தாள்.முதல் நாள் சந்திப்பிற்குப் பின் அவள் முகத்தில் லேசான சிரிப்பை நான் பார்தேன். அடுத்தடுத்த நாட்களில் பிலிப்பைனியை தடுத்து விட்டு நானே முனீராவைப் பார்க்க போனேன். எனக்கு ஏனோ முனீராவை பிடித்திருந்தது சிறிது நேரம் கிடைத்தாலும் அறை எண் 406 க்கு பச்சைக் கண் தேவதையைப் பார்க்கப் போய்விடுவேன்.முனீரா நல்ல புத்திசாலிப் பெண். மென்மையான மலரைப் போன்றவள். முனீரா, தான் 2 மாதம் கர்ப்பமாய் இருப்பதாகவும், அதை இன்னும் தன் குடும்பத்தில் கூட யாருக்கும் தெரியப்படுத்தவில்லை என்றும், என்னிடம் தான் முதலில் சொல்வதாகவும் கூறினாள். நான் அதிர்ச்சி அடைந்தேன். வயிற்றுப் பிள்ளையுடனா தற்கொலைக்கு முயன்றாய் என்று கடிந்து கொண்டேன்.. தனக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என்றும் அதற்கு "ஃபாத்திமா" என்று பெயர் வைக்கப் போவதாகவும், அவளை நன்றாக படிக்கவைத்து ஒரு மருத்துவர் ஆக்கப் போவதாகவும் கூறினாள். பிரசவம் பார்க்க இதே மருத்துவமனைக்குத் தான் வருவேன், நீயும் என்னுடன் கண்டிப்பாய் இருக்க வேண்டும் என்றாள். நானும் சரி என்று உறுதி அளித்தேன். எனக்கும் குட்டி பச்சைக்கண் தேவதையைப் பார்க்க ஆவலாய் இருந்தது. `அவளைப் பார்க்கப் போகும்போதெல்லாம் தொழில் தர்மத்தை மீறி, அவளுக்குப் பிடித்த சாக்லேட்டோ, சிப்ஸோ வாங்கிச் செல்வேன்... பிள்ளைத்தாய்ச்சி பெண் ஆகையால் தற்போது எடையைக் குறைக்க வேண்டாம் என்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் போதும், எடைக் குறைப்பை டெலிவரி ஆன பின் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தேன்.இத்தனைக்கும் எனக்கு அரபிமொழி அவ்வளவாகத் தெரியாது.அவளுக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. எங்கள் சம்பாசனைகள் பெரும்பாலும் என் பட்லர் அரபியிலும், ஊமைச் சைகைகளிலும் இருக்கும். இருப்பினும் மொழியைத் தாண்டி எங்களை ஏதோ ஒன்று பிணைத்திருந்ததை உணர்ந்தேன். நான்காம் நாள் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகையில் நான் அவளுடன் இருந்தேன். என்னை அணைத்து முத்தமிட்டு, தான் அணிந்திருந்த ஒரு பச்சைக் கல் மோதிரத்தை கழற்றி, என் விரலில் அணிவித்தாள். ஓய்வு எடுக்க அம்மா வீட்டுக்குப் போவதாகவும், விரைவில் என்னைத் தொடர்பு கொள்வதாகவும் கூறினாள்..அதன் பின் சில நாட்கள் கழித்து, அவள் கொடுத்த தொலைபேசி எண்ணில் அழைத்தால் யாருமே எடுக்கவில்லை. நானும் வேலைப்பளுவில் முனீராவை மறந்து போனேன். 406 ஆம் அறையைத் தாண்டும் போது மட்டும் அனிச்சையாக என் கண்கள், என் கையிலிருந்த மோதிரத்தைப் பார்க்கும்.இப்படியாக நான்கு மாதங்கள் கழிந்திருக்கும், அது ஒரு சனிக்கிழமை. அவுட் பேசண்டுகளுக்கான நேரம். சவுதி அரேபியா இயல்புக்கு மாறாக மேகமூட்டத்துடன், மழைக்கான அறிகுறிகளுடன் தென் பட்டது. நானும் இரண்டு நோயாளிகளை சந்தித்து விட்டு, உடனிருந்த நர்ஸுடன் சூடான தேநீர் பருகிவிட்டு அடுத்த நோயாளிக்காகக் காத்திருந்தேன்.கதவு தட்டப் பட்டு, தம்பதி சமேதராக வந்தவர்களை ஏறிட்டேன். அந்தப் பெண் உடைந்து விடுவாள் போல ஒல்லியாக இருந்தாள். உடன் வந்த சவுதி பேசத்துவங்கினான். "டாக்டோரா, இவள் என் மனைவி, மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். அழுந்த முத்தமிட்டால் மூச்சு முட்டி இறந்து விடுவாள் போல...குடும்பம் நடத்தவே பயமாக இருக்கிறது. எப்படியாவது இவளைத் தேற்றுங்கள்�", என்றான்.எங்கேயோ பார்த்தமுகம் அவனுடையது, எல்லாம் பேசி முடித்து கணிணியில் பதிவதற்காக, என்ன பெயர்?என்று கேட்டேன். �சாலேஹ்� என்றான். அட இது முனீராவின் கணவன்! இப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது. நான் குழம்பிப் போனவளாய் முனீரா எப்படி இருக்கிறாள்? என்று கேட்டேன்.முனீரா மருத்துவமனியிலிருந்து போன, நான்காவது வாரம், சாலேஹ் வேறொரு பெண்ணைத் ரகசியத் திருமணம் செய்திருக்கிறான். அதைத் தாங்க முடியாத முனீரா தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு (இந்த முறை பிழைக்காமல்) செத்துப் போய்விட்டாளாம், என்று சொல்லி முடித்து என் பதிலுக்கு காத்திராமல் சாலேஹ் வெளியேறினான் புது மனைவியுடன்."என்ன இது? சற்று முன் வரை நன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த இந்தப் பெண்ணிற்கு என்ன ஆயிற்று? திடீரென மோதிரத்தை கழற்றி வைத்துக் கொண்டு இப்படி தேம்பித் தேம்பி அழுகிறாள்??..", என்று என்னை வினோதமாகப் பார்த்தாள் உடனிருந்த நர்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக